Pages

Search This Blog

Wednesday, September 7, 2011

ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?





”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் திரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான்.

ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”

பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமைகளையும் நண்பர் பெயரிலேயே வைத்திருந்ததால் வெற்றிகரமாக நடந்து வந்த வியாபாரத்தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும் தான்’ என்று சொல்லி நண்பர் ஏமாற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழுதார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடுமைகளைச் சொல்லி மனம் குமுறினார்.

இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்ட சுவாமி சுகபோதானந்தா அடுத்தபடியாக அவர்களிடம் “உங்களுக்குப் பிடிக்காத போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன்னார்கள்.

“சரி. அந்த சினிமாவின் வீடியோ காஸெட்டை (சி.டி, டி.வி.டி எல்லாம் வர ஆரம்பிக்காத காலகட்டம் அது) தேடிப் பிடித்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு வரை திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள்” என்றார்.

ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அவர்கள் “ஐயையோ...முடியவே முடியாது. முடிகிற காரியமாக வேறு எதையாவது சொல்லுங்கள்” என்றார்கள்.

“நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும் கூட உங்களுக்குப் பிடிக்காத காட்சிகள் தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் சுகபோதானந்தா.

அவருடைய அழகிய வார்த்தைகளில் “கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமேயொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”

இது அறிவுபூர்வமாக எல்லோருக்கும் புரியக் கூடிய நல்ல விஷயம். ஆனால் மனம் அறிவின் படியா நடக்கிறது? எதை நினைக்கக் கூடாது என்று கட்டளை இடுகிறோமோ அதைப் பற்றியே அல்லவா மனம் பிடிவாதமாக நினைக்கிறது. இந்த காயங்கள் ஒவ்வொரு முறை நினைக்கும் போது புதிய காயம் போலல்லவா வலிக்கிறது. இந்த காயங்களை ஆற வைப்பதெப்படி? மறப்பதெப்படி?

இது சாத்தியமாக வேண்டுமானால் இரண்டு மாபெரும் உண்மைகளை நினைவில் இருத்த வேண்டும்.

ஒன்று எந்த அநியாயமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டனைகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே. அது சில சமயங்களில் நம் கண்ணிற்குப் படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்திரம் இல்லை. ஹிந்தியில் ஒரு அழகான பழமொழி உண்டு. ’இறைவனின் பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை’. இது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியே தெரியாமல் தனக்குள்ளேயே புழுங்கும்படியான எத்தனையோ வேதனைகள் உண்டு. எனவே வெளித் தோற்றத்தை வைத்து எதையும் எடை போடுவது சரியானதாக இருக்காது.

எனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தர் பல அப்பாவி ஏழை ஊழியர்களை ஏமாற்றி, அவர்களுக்கு சேரவிருந்த பணத்தைத் தராமல் ஏமாற்றியவர். அவருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உண்டு. அவர் அப்படி ஏமாற்றியவர் என்றாலும் அவருடைய செல்வச் செழிப்பில் ஒரு குறையும் கடைசி வரை இருக்கவில்லை. அவர் கடைசியாக விற்ற சொத்து ஒன்று எதிர்பாராத நல்ல விலைக்குப் போய் அவர் இலாபத்தை பல மடங்கு ஈட்டித் தந்தது. இதையெல்லாம் பார்க்கையில் ’ஏமாற்றிய ஆள் நன்றாகத் தானே இருக்கிறார். அவருக்குப் பணம் சேர்ந்து கொண்டே தானே இருக்கிறது’ என்று யாருக்குமே தோன்றுவது இயற்கை.

ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு. அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.

’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தவறிழைத்தவர் தண்டனை பெறாமல் தப்புவதில்லை என்றறிந்து தெளியும் போது காயத்தின் தீவிரம் குறையும்.

இரண்டாவது உண்மை நமக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் எதுவுமே காரணம் இல்லாமல் வருவதில்லை. அவை நாம் நம் முந்தைய செயல்களால் சம்பாதித்தவையாக இருக்கலாம், நம்முடைய குறைபாடுகளால் நாம் வரவழைத்தவையாக இருக்கலாம், அல்லது நாம் புடம் போட்ட தங்கமாக மாறத் தேவையான அனுபவங்களாக இருக்கலாம். இதை ஒத்துக் கொள்ள நமக்கு சிறிது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இது மாபெரும் உண்மை.
இதற்கு நாமே காரணம், அல்லது நம் பக்குவத்தினை அதிகப்படுத்த கிடைத்த பாடம் இது என்று உணரும் போது ஒரு அனுபவத்தின் கசப்புத் தன்மை குறைகிறது. தெளிதலும், மறந்து முன்னேறுவதும் சாத்தியமாகிறது.

இந்த உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு சுவாமி சுகபோதானந்தா சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள். நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மைக் காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே இதெல்லாம் புரியும் போது அது வரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.

Friday, September 2, 2011

பணக்காரர் ஆக பாபிலோன் சொன்ன 7 டிப்ஸ்!




டிஸ்கி : அது நடிகை பாபிலோனா அல்ல, பாபிலோன் நாடு..நன்றாகப் படிக்கவும்.

சிறுவயதில் பள்ளிப்பாடத்தில் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று பாபிலோனின் தொங்கும் தோட்டம் என்று படித்திருப்பீர்கள்.(மீண்டும் டிஸ்கியைப் படிக்கவும்). அப்படிப் புகழ்பெற்ற பாபிலோனின் மன்னர் சார்கன் மக்கள் மேல் அக்கறை கொண்டவர்.

தன் மக்களில் ஒரு சிலர் மட்டும் பணக்காரர் ஆகிக்கொண்டே போக பலரும் ஏழையாக இருப்பது ஏன் என்று கவலை கொண்டார் மன்னர். மந்திரியை அழைத்து ஏன் இப்படி நடக்கிறதென்று கேட்டார்.

அதற்கு மந்திரி “ஒருவேளை அந்த சிலருக்கு மட்டும் எப்படி பணக்காரர் ஆவதென்ற வித்தை தெரிந்திருக்கலாம். அப்படித் தெரிந்துகொண்டு சிலர் முன்னேறுவதைத் தவறென்று சொல்ல முடியாதே?” என்று கேட்டார்.

“நீர் சொல்வதும் சரி தான்..ஆனால் அந்த ரகசியம் தெரிந்தவர் ஏன் அதை தெரியாதோருக்கும் சொல்லக்கூடாது அமைச்சரே?..யார் இந்த பாபிலோனின் பெரும் பணக்காரர்?” என்றார் மன்னர்.

”ஆர்கட் தான்..கடும் வறுமையுடன் இளம்வயதில் கஷ்டப்பட்டவன். இப்போது நம் நாட்டிலேயே அவன் தான் பணக்காரன். அவனை நாம் கேட்கலாம் “ என்று மந்திரி சொன்னதை மன்னரும் ஆமோதித்தார்.

அரசவைக்கு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டான் ஆர்கட். மக்களும் அங்கே குழுமினர். மன்னரே விஷயத்தை எடுத்துச் சொன்னார்.

“ஆகவே ஆர்கட், ஏழையாக இருந்த நீ எப்படி பணக்காரன் ஆனாய் என்று மக்களுக்குச் சொல். அவர்களும் அவ்வாறே செய்து முன்னேறட்டும்” என்றார் மன்னர்.

ஆர்கட் பேச ஆரம்பித்தான் :

எனது இளம்பருவத்தில் நான் மிகவும் ஏழையாக இருந்தேன். காலியான பர்ஸும், பணக்காரன் ஆகவேண்டுமென்ற தீராத ஆசையுமே என்னிடம் அப்போது இருந்தது. எனது மெலிந்து நலிந்து போயிருந்த என் பர்ஸை பெருக்க வைக்க என்ன வழிகள் என்று தீவிரமாக யோசித்தேன். ஏழு ஸ்டெப்ஸைக் கண்டு பிடித்தேன். அதை இங்கே சொல்கிறேன், கேளுங்கள்.

1. பர்ஸைப் பருக்க வையுங்கள் :

’பர்ஸ் என்ன நமீதாவா..பெருக்க வைக்க?’ என்று விதண்டாவாதம் பேசினால் உருப்படவே மாட்டீர்கள், கடைசி வரை கேர் ஆஃப் ப்ளாட்ஃபார்ம் ஆகவே இருக்க நேரிடும். எனவே நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் மாதா மாதம் சம்பளம் வாங்கும்ப்போது, உங்கள் பர்ஸ் தடிமனாக இருக்கிறது. நாளாக நாளாக அனைத்துப் பணமும் காலியாகி பர்ஸ் மெலிந்து விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பர்ஸை குண்டாக்குங்கள்.


அதற்கான எளிய வழி, நீங்கள் சம்பாதிப்பதில் 10%-ஐ எக்காரணம் கொண்டும் செலவளிக்க எடுக்காதீர்கள். அது பர்ஸிலேயே இருக்கட்டும்.(சரிய்யா..பேங்குலயே இருக்கட்டும்)

நீங்கள் மாதம் பத்தாயிரம் சம்பாதிப்பவராக இருந்தால்கூட, எக்காரணம் கொண்டும் 1000 ரூபாயை வெளியே எடுத்துவிடாதீர்கள். அது உங்கள் பணம் அல்ல, உங்கள் எதிர்காலத்தின் பணம் என்று ஞாபகம் வையுங்கள். அவ்வாறு உங்கள் பேங்க் பேலன்ஸ் ஏறஏற, பணக்காரர் ஆவது பற்றி பாசிடிவ்வாக உணர ஆரம்பிப்பீர்கள்.
2. செலவைக் குறைங்கப்பா :

’சம்பாதிக்கிறதுல 10%ஆ..சான்ஸே இல்லை’ என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது. ’மனமிருந்தால் மார்க்கம் உண்டு..மணமானால் மாப்பிள்ளை குண்டு ‘ என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா?


உங்கள் மாதாந்திரச் செலவுகளை எக்ஸெல்லிலோ, நோட்டிலோ எழுதி வையுங்கள். ஒவ்வொரு ரூபாயும் எந்த வழியில் செலவாகிறது என்று குறித்து வாருங்கள். கொஞ்ச நாட்களில் உங்களுக்கே தெரியும், எந்தச் செலவைச் சுருக்கினால் இந்த 10% சேமிப்பை செய்ய முடியும் என்று.

சம்பாத்தியத்தில் 10% எடுத்து வைத்துவிட்டு, மீதியில் மட்டுமே குடும்பத்தை ஓட்டுவோம் என்று உறுதி கொண்டீர்கள் என்றால், பணக்காரர் ஆவதின் இரண்டாவது படியை வெற்றிகரமாகக் கடந்துவிட்டீர்கள் என்றே அர்த்தம்.

3. பணத்தைப் பெருக வையுங்கள்:

’இப்பத்தான் பர்சைப் பெருக்க வையின்னான்..அடுத்து பணத்தையுமா.பணத்தை எப்படி,,’-ன்னு நீங்கள் விவகாரமாக யோசிப்பது புரிகிறது. இப்போது உறுதியுடன் நீங்கள் 10% -ஐ சேமித்து வருவது பாராட்டத்தக்கது. ஆனால் அந்தப் பணத்தை வெறுமனே பேங்கிலோ வீட்டிலோ வைத்தால் என்ன ஆகும்?

பண வீக்கம் என்ற அரக்கனைப் பற்றித் தெரியும் இல்லையா? செங்கோவி சொன்ன பயங்கரமான பீரோ உதாரணம் ஞாபகம் இருக்கிறது, இல்லையா?

எனவே அந்தப் பணத்தை பணவீக்கத்திற்கு எதிராக, உங்களுக்கு ஆதரவாக உழைக்க விடுங்கள். பணவீக்கம் வருடத்திற்கு 7% என்றால், உங்கள் பணம் இண்ட்ரஸ்ட்டாக சம்பாதிப்பது 7 %க்கு மேல் இருக்க வேண்டும். இல்லையென்றால், அது தன் மதிப்பை இழந்து கொண்டே போகும். எனவே 7%க்கு மேல் அதிக வருமானம் எங்கே கிடைக்கும் என்று பார்த்து முதலீடு செய்யுங்கள்.


நீங்கள் பணத்திற்காக வேலை செய்வது போலவே, பணம் உங்களுக்காக வேலை செய்யட்டும்.

4. சேமிப்பை இழப்பில் இருந்து காப்பாற்றுங்கள் :

இப்போது அடுத்த முக்கியமான ஸ்டெப்..பணவீக்கத்துக்குப் பயந்து 50% வட்டி தர்ற டுபாக்கூர் ஃபைனான்ஸ் கம்பெனிங்ககிட்ட உங்க பணத்தைக் கொடுத்தா என்ன ஆகும்? தலையில் துண்டு தான் இல்லையா? எனவே எங்கே உங்கள் முதல் பாதுகாப்பாக இருக்குமோ, அங்கே முதலீடு செய்யுங்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் முதலுக்கு மோசம் வராத இடமாகப் பார்த்து முதலீடு செய்யுங்கள். அது நீங்கள் கஷ்டப்பட்டுச் சேமித்த பணம். நாம் அவ்வாறு கஷ்டப்பட்டது அவற்றை இழப்பதற்கு அல்ல. எனவே தங்கத்தில் முதலீடு செய்ய சரியான நேரம் வரும்போது, தங்கம் வாங்குங்கள். நிலத்தில், அரசுப்பத்திரங்களில், பங்குச்சந்தையில் என உங்களுக்குச் சரியான இடம் பார்த்து முதலீடு செய்யுங்கள். அறிந்தோரிடம் ஆலோசனை கேளுங்கள்.

5. பணம் சம்பாதிக்கட்டும் பணத்தை! :

இவ்வாறு உங்கள் சேமிப்பு சரியான இடத்தில் உங்களுக்காக உழைத்து சம்பாதித்துக்கொடுக்கும். இப்போது என்ன செய்வீர்கள்? உடனே பீட்ஸாவும் புடவையும் வாங்கி, எஞ்சாய் செய்தீர்கள் என்றால், கவுண்டர் செந்தில் முகத்தில் முழித்த மாதிரி ஊஊ தான்!

உங்கள் பணம் சம்பாதித்த பணத்தை மீண்டும் முதலீட்டிலேயே போடுங்கள். வீடு வாங்கி வாடகைக்கு விட்டதால் வரும் பணம் என்றால் வாடகையைச் செலவழிக்காமல் வங்கியில்போடுங்கள். வங்கியில் இருந்து வட்டி வருகிறதென்றால், அதைத் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். அந்தப் பணம், உங்கள் முதலீட்டு முறைகளில் ஒன்றுக்கே திரும்பச் செல்லட்டும்.

அது உழைப்பில் பிறந்த, உழைக்கப் பிறந்த பணம். அதை ஸ்வாஹா செய்யாமல் உழைக்க விடுங்கள்.

6. காப்பீடு செய்யுங்கள் :

சம்பாதிப்போர் பெரும்பாலானோர் செய்யும் தவறு இன்சூரன்ஸ் திட்டங்கள் எதிலும் சேராமல் இருப்பது. உங்களையும், உங்கள் முதலீட்டையும் காப்பீடு செய்யுங்கள். செலவுகள் அதிகரித்துக்கொண்டே போகும் இக்காலத்தில், உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காவும் மருத்துவம் உள்ளிட்ட காப்பீடுகளை இப்போதே எடுத்து வையுங்கள். எதிர்பாராத நேரத்தில் அது உதவும்.

7. உங்கள் சம்பாதிக்கும் திறனைக் கூட்டுங்கள் :

இந்த மாதிரி நம் பணம் நமக்காக உழைக்க ஆரம்பித்தவுடன், பலரும் செய்யும் தவறு சந்தோசத்தில் தனது சம்பாத்தியத்தைப் பெருக்குவதில் கோட்டை விடுவது தான். பணத்திற்குப் போட்டியாக நீங்களும் உழைக்க வேண்டிய நேரம் இது. பலநாள் போராடி, செலவுகளைக் குறைத்து செல்வந்தர் ஆக ஒரு வழியினை உருவாக்கி விட்டீர்கள்.

இன்னும் 10%-ஐ தனியே ஒதுக்கிக்கொண்டே இருக்கின்றீர்கள். உங்கள் சம்பளம் கூடக்கூட அந்த 10% தொகையும் கூடும், அதன் மூலம் முதலீடும் கூடும் ,அதன்மூலம் நம் வருங்காலத்திற்கான செல்வமும் கூடும்.

எனவே சொகுசு கண்டு, சோம்பி விடாதீர்கள். Rich Dad-Poor Dad புகழ் ராபர்ட் கியோசாகி ஒரு முறை சொன்னது போல் பணக்காரர் ஆவது நீண்ட நாள் எடுக்கும், போரடிக்கும் பயணம்.

ஆனால் அதுவே பாதுகாப்பானது.

ஆர்கட் தன் பேச்சினை முடித்துக்கொண்டு சொன்னான் : உலகில் நீங்கள் கனவு காண்பதை விடவும் அதிக செல்வம் கொட்டிக்கிடக்கிறது. இப்போதே நான் சொன்னபடி திட்டமிட்டு உழைக்க ஆரம்பியுங்கள். முன்னேறுங்கள், செல்வந்தர் ஆகுங்கள். அது உங்கள் உரிமை!

என்ன பாஸ், இந்த 7 ஸ்டெப்ஸை யூஸ் பண்ணி முன்னேற நீங்களும் ரெடியா?

Thursday, September 1, 2011

மங்காத்தா அதிரடி ஆட்டம் – விமர்சனம்


Mankatha review

அஜித்தின் ஐம்பதாவது படம் தான் இந்த மங்காத்தா. தொடர் தோல்விகளால் ஒரு வெற்றியை கொடுத்தே தீர வேண்டிய சூழ்நிலை. அதற்காக வழக்கம் போல் இந்த படத்துல ஹீரோ ஊரையோ அல்லது நாட்டையோ காப்பாத்த கிளம்பல. பணம், பெண் என்று பித்து பிடித்து அலையும் ஒரு நெகடிவ் கதாபாத்திரம். “Strictly No Rules” என்று அஜித் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அனைத்து விதிகளையும் உடைத்து மங்காத்தா விளையாடி அதில் ஜெயித்தும் இருக்கிறார் வெங்கட் பிரபு.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் சூதாட்டத்தில் ஈடுபடுத்தப்படும் ஐநூறு கோடி ருபாய் பணத்தை தன் வசாமாக்க திட்டம் போட்கிறார் ஜெயப்ரகாஷ். அதை கொள்ளை அடிக்க புறப்படுகிறது வைபவ், பிரேம் ஜி என்று நால்வர் கொண்ட கும்பல். இதை தெரிந்துக்கொண்டு அவர்களிடம் ஐந்தாவதாக சேர்கிறார் விநாயக் என்ற சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான அஜித்.

அந்த ஐந்து பேரும் திட்டம் போட்டவாறு ஐநூறு கோடியையும் கொள்ளையடித்து விடுகின்றனர் ஆனால் அதை பங்கிட்டு கொள்வதில் தான் பிரச்சனை. பணத்தாசை காரணமாக அனைவரையும் கொன்று அதை ஒரே பங்காக சுருட்ட நினைக்கிறார் அஜித். ஆனால் பணம் அவருக்கே கிடைக்காமல் காணாமல் போகிறது. அதை தேடி தான் மீதி கதை.. இந்த கும்பலை தேடிபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன். கூடவே எதிர்பாராத க்ளைமாக்ஸ்.

“எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது”னு படத்தோட ட்ரைலர்லேயே கதையை சொல்லிட்டாங்க. அஜித் முதற்கொண்டு படத்தில் வரும் அனைவருமே கெட்டவர்கள் தான்.இவராவது நல்லவராக வராரேனு ஒருத்தரை நினைத்தால் அட அவரும் கடைசியில கெட்டவர் தான். அந்த ஐந்து பேரில் அஜீத்திற்கு மட்டும் முக்கியம் கொடுக்காமல் அவரும் அதில் ஒருவராகவே காண்பித்து கதையை நகர்த்தியது அருமை. அதே போல் பணம் காணாமல் போகும் போது அதை யார் எடுத்திருப்பார்கள் என்று அந்த கதாபாதிரங்களுக்கு எழும் குழப்பங்களும், கேள்விகளும் நமக்கும் எழாமல் இல்லை.

mankatha trisha lakshmi rai

அஜீத்தின் இது நாள் வரைய எல்லா படங்களையும் சில நொடிகள் ஒரே காட்சியில் ஓட விட்டு “அஜித் 50” என்று படம் தொடங்கும்போதே அதிரடி. விசில் பறக்கிறது. அடுத்த மே மாதம் வந்தால் தனக்கு நாற்பது வயது என்ற கூறி நரைத்த முடியுடன் இந்த படத்தில் அஜித் கொஞ்சம் அசத்தலாக வருகிறார். முதல் பாதியில் தனியாக செஸ் விளையாடி கதையை நரெட் செய்யும்போது பின் பாதியில் பணத்தின் மேல் தனக்கு உள்ள பைத்தியத்தை வெளிபடுத்தும் காட்சிகளிலும் மிகச்சிறந்த பர்பார்மென்ஸ்.

இந்த படத்துக்கு அஜித் வாய்க்குள்ளேயே சென்சார் போர்டு உறுப்பினர்கள் ஒக்காந்து இருந்தாங்க போல. அவர் வாயை திறந்தார்னாலே வெறும் பீப்… பீப்.. சத்தம் தான். அவ்வளவு மோசமான கெட்ட வார்த்தைகள். உதட்டசைவில் அதை புரிந்து கொள்கிறவர்கள் கைதட்டி ஆற்பரிக்கிரார்கள். புரியாதவர்கள் எரிச்சலுடன் முழிக்கிறார்கள். படத்தில் திரிஷா, ஆண்ட்ரியா மற்றும் அஞ்சலி இருந்தும் படத்திற்கு தேவை இல்லாத கதாபாத்திரங்கள். ஆனால் லட்சுமிராய் கொஞ்சம் பயன்ப்பட்டு இருக்கிறார்.

அஜித் திரிஷா காதலே இந்த கதைக்கு தேவையில்லாத போது அவர் அதற்கு அழுவதும், ஒரு சோக பாட்டும் நம் பொறுமையை சோதிக்கிறது. சோக பாடல் ஆரமித்தபோது எங்கே இன்னும் யுவன் சங்கர் ராஜாவை காணோமே என்று யோசிக்க ஆரமித்த போது கரெக்டாக வந்து அட்டென்டன்ஸ் போட்டு விட்டார். ஆனால் இரண்டு குத்து பாடல்களை தவிர வேறு ஏதும் இதில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வழக்கம் போல் பின்னனி இசை கலக்கல்.

ajith-premji-vaibhav-veer-mankatha-still

வெங்கட் பிரபுவின் படத்தில் வழக்கம் போல் வரும் அத்தனை சகாக்களும் இந்த படத்திலும். இளைஞர்களை டார்கெட் செய்யும் வசனங்கள் மூலம் நிறைய காட்சிகளில் கைதட்டல்கள் பெறுகிறார். ஒரு பாடலில், அஜித் மற்றும் த்ரிஷா நடனமாட, வீட்டின் உட்புறங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே வருவது மிகவும் புதுமையான, ரசிக்கும்படியான முயற்சி. வழக்கம் போல் பிரேம்ஜி இந்த படத்திலும் மற்ற திரைப்படங்களின் வசனம் பேசியே வருகிறார். அவ்வப்போது எரிச்சல் ஊட்டினாலும் பல இடங்களில் டைமிங் வசனத்தால் சிரிக்க வைக்கிறார். உதரணமாக “மனுஷன் கண்டு புடிச்சதுல உருப்படியானது ரெண்டே ரெண்டு தான்.. ஒன்னு சரக்கு… இன்னொன்னு முறுக்கு.” என்று சொல்லும்போது அரங்கமே கைதட்டலில் அதிர்கிறது.

படம் முடிந்து என்டு கார்டு ஓடும்போது அஜித் செய்யும் லூட்டிகள் கொஞ்ச நஞ்சமில்லை. அதில் தனியாக ஒரு நகைச்சுவை குறும்படம் பார்த்த அனுபவம் இருந்தது. மொத்தத்தில் இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம். அஜித் ரசிகர்களுக்கு இது நிச்சயம் கொண்டாட வேண்டிய பட